Translate

இந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங் - வாழ்க்கை வரலாறு

சாது சுந்தர் சிங்
சாது சுந்தர் சிங் என்று அழைக்கப்படும் சுந்தர் சிங் 1889ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ம் தேதி பஞ்சாப் மாசிலத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் பிறந்தார். அவர் பெற்றோர் சீக்கிய மார்க்கத்தைச் சோந்தவர்களாய் இருந்தனர். அவருடைய தாயார் மத நம்பிக்கையில் மிகவும் பக்தி நிறைந்தவராய் இருந்தார். தன் மகனை மிகவும் அதிகமாக நேசித்ததினால் தன்னுடைய மகனும் தங்களுடைய மார்க்கத்தை அதிகமாக நேசித்து அதிலே ஒரு பக்தி நிறைந்த சாதுவாக மாறவேண்டும் என்று விரும்பினார். இளமைப் பருவத்திலிருந்தே சுந்தர் இந்து மார்க்கத்தின் புனித நூல்களை, குறிப்பாக பகவத் கீதையை ஆழ்ந்து படித்தார். அவர் ஏழு வயதாக இருக்கும்போது அதை மனப்பாடம் செய்யவும் ஆரம்பித்தார். அநேக சமயங்களில் வீட்டில் அனைவரும் நித்திரைக்குச் சென்றபின்பு சீக்கியர்களின் புனித புத்தகமாகிய கிரந்தத்தையோ, அல்லது இந்து மத நூல்களையோ அல்லது முஸ்லீம்களுடைய குரானையோ அவர் நுட்பமாகப் படிப்பார். ஆவிக்குரிய வாழ்க்கையில் திருப்தி காணவேண்டும் என்னும் வாஞ்சை சுந்தரை பற்றிக்கொண்டது.

கிறிஸ்துவைச் சந்தித்தல்
சுந்தர் படித்துக் கொண்டிருந்த கிராமத்து மிசன் பள்ளிக்கூடத்தில்தான் முதன் முதலாக அவருக்குக் கிறிஸ்துவ மார்க்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. வேதபுத்தகத்திலிருந்து வசனத்தை வாசிக்கச்சொன்னபோது அதை பகிரங்கமாக் கிழித்து எறிந்ததின்மூலம் கிறிஸ்து மார்க்கத்தினை எதிர்க்கும் எல்லா மாணவர்களுக்கும் அவர் தலைவரானார். விரைவில் அவர் அந்த மிசன் பள்ளிக்கூடத்தை விட்டு அரசு பள்ளிக்கூடத்தில் போய்ச் சேர்ந்தார். பல சமயங்களில் தெருவில் அல்லது திறந்த வெளியில் நின்று பிரசங்கிக்கும் மிசனறிமார்கள் மீது கற்களையோ அல்லது சேற்றையோ எடுத்து வீசும்படியாக முரடர்களை அவா தூண்டிவிடுவதும் உண்டு. அதுமட்டுமல்லாமல் அவர் புதிய ஏற்பாட்டை பகிரங்கமாகப் பலா முன்னிலையில் தீயிட்டுக் கொளுத்தியதும் உண்டு.

ஒருகட்டத்தில் அவர் மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டார். உண்மையான சமாதானத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் அல்லது தன் வீட்டின் பக்கத்தில் கடந்து செல்லும் ரயில் முன் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டும் என்று உறுதிபூண்டார். ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அவர் எழுந்தார். குளித்து விட்டு கடவுளே, உண்மையான கடவள் ஒருவர் உண்டு என்றால் உம்மை எனக்குக் காண்பியும், இரட்சிப்பிற்கு உரிய வழியையும் சமாதானத்தையும் நீர் எனக்குத் தரவேண்டும் என்று சொல்லி அவர் வேண்ட ஆரம்பித்தார். உடனே அந்த அறையில் ஒரு பேரொளி வீசியது. அதில் அவர் மிகவும் வெறுத்து வந்த இயேசு கிறிஸ்துவின் சாயலைக் கண்டார். அவர் தமது ஆணிகள் பாய்ந்த கரத்தைச் சுந்தருக்குக் காண்பித்து நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? நான் உன்னுடைய இரட்சகர் என்று சொன்னார். இப்பொழுதே சுந்தரின் இதயம் மாபெரும் மகிழ்ச்சியினால் நிரம்பியது. அதுவரையில் தன் வாழ்க்கையில் நாடி தவித்துக் கொண்டிருந்த ஆவிக்குரிய தாகமும் தணிந்ததை அவர் உணர்ந்தார். அவர் வாழ்க்கை முழுவதும் மாறியது. அவர் அடைந்த இந்த மகத்தான பரவசமான அனுபவத்திலிருந்து அவரைச் சந்தேகப்பட வைக்கவோ அல்லது மாற்றவோ யாராலும் முடியவில்லை.

அழைப்பு
இவ்விதமான இந்தப் புதிய அனுபவத்தைப் பெற்ற சுந்தர் உடனடியாக தனது தந்தையிடம் சென்று தான் ஒரு கிறிஸ்தவனாகி விட்டதைக் கூறினார். அவருடைய தந்தை இதை முதலில் நம்பவில்லை. ஆனால் பிறகு அவருடைய குடும்பம் முழுவதுமே சுந்தர் கிறிஸ்தவனாக மாறுவதற்கு எடுத்த தீர்மானத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றது. சுந்தர் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். உண்பதற்கோ உணவோ, தங்குவதற்கு உறைவிடமோ இல்லை. ஒரு மரத்தின் அடியில் தங்கினார். பிறகு மீண்டும் அவர் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வீட்டுக்கு வெளியில் வைத்து உணவு கொடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட வேலை ஆட்களோடு அவர் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார். என்றாலும் மனதிலே பரிபூரண மகிழ்ச்சியோடு இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். கடைசியாக நஞ்சு கொடுக்கப்பட்டு வீடடிலிருந்தே துரத்தப்பட்டு நோய்வாய்ப்பட்டார். இறக்கும் நிலையையும் அடைந்தார். என்றாலும் அவரிடம் அன்புகொண்ட ஆண்டவர் தம் சித்தத்தைச் சுந்தரிலே நிறைவேற்ற மரணப் பிடியிலிருந்து விடுவித்தார்.

லூதியானாவில் இருந்த மிசனறிகளிடத்தில் சென்று அவர்களோடு தங்கினார். வேதவசனங்களைக் கற்க ஆரம்பித்தார். சுந்தர் தம் 16ம் பிறந்த தினத்தன்று சிம்லா நகரத்தில் ஞானஸ்நானம் பெற்றார். ஆழமான சிந்தனைக்கும் உறுதியான ஜெபத்திற்கும் பின்னர் சாது சுந்தர் சிங் தன்னைப் பரிபூரணமாக கிறிஸ்துவின் கரத்தில் அர்ப்பணித்தார். அவர் ஒரு கிறிஸ்தவ சாதுவாக மாறினார். வெறும் கால்களோடும் கையில் ஏந்திய வேதபுத்தகத்தின் பகுதியான புதிய ஏற்பாட்டோடும் எந்தவிதமான மனிதரின் உதவியும் இல்லாத நிலைமையில் தன்னை ஆட்கொண்ட கிறிஸ்துவுக்கா அவர் புறப்பட்டுச் சென்றார். நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையப் பட்டிருக்கிறது. நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையப் பட்டிருக்கிறேன் (கலா.6:14) என்ற வசனத்தைத் தன்னுடைய வாழ்க்கையில் குறிக்கோளாக அவர் ஏற்றுக்கொண்டார். என்மீது உள்ள அன்பினால் இயேசு கிறிஸ்து தம்மைத் தியாகம் பண்ணினார். அதைப் போலவே நானும் இயேசு கிறிஸ்துவின்மேல் உள்ள என்னுடைய அன்பினால் என்னைத் தியாகம் செய்யவேண்டும் என்று அடிக்கடி கூறுவது உண்டு.

சாது சுந்தர்
சுந்தர் தனது இயேசு கிறிஸ்துவுக்காகப் பல வேளைகளில் பகை, எதிர்ப்பு இவற்றைச் சந்தித்ததுண்டு. பசியோடு விரட்டப்பட்ட நிலமையில் அவர் காடுகளுக்கு உள்ளாகச் சென்று அங்கே தங்குவர் உண்டு. குளிர்ந்த காற்றிற்கும் மழைக்கும் தன்னைத் தப்பவிப்பதற்காகக் காடுகளிலே உள்ள குகைகளில் அவர் தங்குவது உண்டு. ஒருநாள் காலையில் ஒரு சிறுத்தை தான் தங்கியிருந்த குகையில் தனக்குச் சமீபத்தில் உறங்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். மற்றொரு முறை ஒரு வேங்கைப்புலியோடுகூட அவர் படுத்து உறங்கியதையும் அறிந்தார். ஒரு நாள் அதிகாலையில் தன்னுடைய போர்வையின் கீழே ஏதோ ஒன்று இருப்பதுபோல, உணர்ந்த அவர் அது என்ன என்று பார்த்தபோது, குளிரால் பாதிக்கப்பட்ட ஒரு பெரிய நல்ல பாம்பு அனல் பெறுவதற்காக அவரோடுகூடப் படுத்திருந்ததையும் அறிந்தார். இமயமலைப் பகுதிகளில் உள்ள கணவாய் வழியாகப் பிரயாணம்பண்ணுவது என்றாலும் அவர் எப்போதுமே வெறுங்கால்களோடுதான் தன் பிரயாணத்தை மேற்கொண்டார். அனபடியினால், கற்கள், பனிக்கட்டிகள் போன்றவற்றினால் அவர் கால்கள் கிழிக்கப்பட்டு அவர் கால்களில் இரந்து இரத்தம் கசிந்து கொண்டே இருக்கும்.

பல வேளைகளில் பலவிதமான முறைகளில் அவர் துன்பப்படுத்தப்படும்போதும், அவர் மகிழ்ச்சியோடும் பொறுப்போடும் இருப்பதைக் கண்ட அநேகர் அவருடைய நற்செய்தியை ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். ஒரு சமயம் ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கிருந்த மரத்தடியில் உட்கார்ந்து பாடல்கள் பாட ஆரம்பித்தார். அதி சீக்கிரத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஆனால் அவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அங்கு பேசுவதைக் கேட்ட உடனே அந்தக் கூட்டம் அவர்மேல் கோபம் கொண்டது. அக்கூட்டத்தில் குரூப்பராம் என்ற ஒருவன் மிகவும் மூர்க்கம்கொண்டு, சாதுவைப் பலமாகத் தாக்கினபடியினால் அவர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கீழே விழுந்தார். அவர் கைகளும், முகமும் , கன்னங்களும் கீழே கிடந்த பாறைகளினால் காயப்பட்டு இரத்தம் கசிய ஆரம்பித்தது. என்றாலும் மிகவும் சாந்தமாக அவர் எழுந்து அந்த மக்களின் மன்னிப்புக்கா  ஜெபம்செய்து விட்டு, மறுபடியும் ஆண்டவரின் அன்பைப் பற்றிக் கூற ஆரம்பித்தார். இவரது சாந்தம் குரூப்பராம் என்பவனை ஆழமாகத் தொட்டது. பின்பு அவன் ஒரு விசுவாசியாக மாறினான்.

கொள்ளைக்காரனின் உறைவிடமான ஒரு காட்டினை ஒருமுறை சுந்தர் சிங் கடந்து செல்ல நேரிட்டது. தீடிரென்று அவரை நோக்கி திருடர் நால்வர் பாய்ந்து வந்தனர். ஒருவன் கையிலே கூர்மையான கத்தியை வைத்திருந்தான். தனக்கு முடிவு வந்துவிட்டது என்று எண்ணிய சுந்தர் மௌனமாக ஜெபிக்க ஆரம்பித்தார். இவ்விதமாக அவர் ஜெபிப்பதைக் கண்ட அவன் அச்சரியப்பட்டு அவர் யார் என்று விசாரித்தான். தான் ஒரு கிறிஸ்தவ சாது என்றார். அத்துடன் தன்னுடைய கையில் உள்ள புதிய ஏற்பாட்டைத் திறந்து ஐசுவரியவான், லாசரு பற்றி எழுதியிருக்கிற பகுதியை வாசித்து விளக்கினார். கத்தியோடு அவரை நெருங்கிய அந்த மனிதனில் ஆழமான பாவ உணர்வு ஏற்பட்டது. அவன் சுந்தரைத் தனது குகைக்கு அழைத்துச் சென்று அங்கு அவன் கொன்று குவித்திருந்த மனிதர்களின் எலும்புக்கூடுகளை அவருக்குக் காண்பித்து, இத்தனை கொலைகளுக்கும் தான்தான் பொறுப்பு என்று துக்கத்தோடு கூறினான். சுந்தர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள மன்னிப்பினை ஏற்றுக்கொள்ளும்படியாகக் கூறி அவனை இரட்சிப்பிற்குள் நடத்தினார்.

திபெத்  நாட்டில்  சுந்தர்
கிறிஸ்துவையே கேள்விப்பட்டிராத கடினமான அபாயம் நிறைந்த இடங்களுக்கெல்லாம் சுந்தர் தீர்மானத்துடனும் தைரியத்துடனும் சென்றார். சுந்தர் பலமுறை திபெத் நாட்டிற்குச் சென்றார். ஒருமுறை அவர் ஒரு சிறு பட்டணத்தில் ஆண்டவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தபோது வெளிநாட்டு மார்க்கத்தை இங்கு பிரசங்கித்ததற்காக அவர் குற்றம் சாட்டப்பட்டுக் கைதியாக்கப்பட்டார். அவருடைய ஆடைகளை உரிந்துவிட்டு அவரை ஆழமான தண்ணீர் அற்ற கிணற்றில் மேற்புறத்தை மூடி பூட்டி விட்டார்கள். இதற்கு முன்னால் இவ்விதமாகப் பலர் அந்தக் கிணற்றில் தள்ளப்பட்டிருந்தனர். சுந்தர் கிணற்றினுள் கிடந்த எலும்புக் குவியல் மற்றும் அழுகிக் கிடந்த சடலங்கள் இவற்றின்மேல் விழுந்தார். மூன்றாவது இரவில் அவர் ஆண்டவரை நோக்கி nஐபித்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கதவு திறக்கப்படுவதையும், அதிலிருந்து இறக்கப்படும் கயிற்றினைப் பற்றிக்கொள்ளும்படியாகச் சொல்லப்பட்ட ஒரு சத்தத்தையும் கேட்டார். அவர் கயிற்றைப் பிடித்தார். சீக்கிரமாக அவர் கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டார். அவரை அக் கிணற்றிலிருந்து விடுவித்த அடையாளம் தெரியாத அம் மனிதன் அந்தக் கதவைப் பூட்டிவிட்டு இரவின் இருளிலே மறைந்துவிட்டார். தன்னைக் கடவள்தான் இவ்விதமாகக் காப்பாற்றினார் என்பதை சுந்தர் பின்னர் புரிந்துகொண்டார். தன்னுடைய உடலில் தேவையான பலம் பெற்றவுடன் மீண்டும் அவர் இரட்சிப்புக்காக ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக் ஆரம்பித்தார். பலர் இரட்சிப்பைப் பெற்றனர்.


நேபாளத்தில் சுந்தர்
இந்தியாவின் வடபாகத்தில் அமைந்திருக்கும் இன்னொரு நாடு நேபாளம். சாது சுந்தர் சிங் காலத்தில் இங்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. சுந்தர் நேபாளத்திற்குச் சென்று அங்கு கிறிஸ்துவைப் பிரசங்கித்தார். இதனால் அவர் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் இருந்த மற்ற கைதிகளுக்கு அவர் கிறிஸ்துவைப் பற்றிக் கூறினார். கிறிஸ்துவைப் பற்றிக் கூறுவதிலேயே தம் நேரத்தைப் போக்கினார். எனவே அவரைத் தனியாக ஒரு சிறிய அறையில் அடைத்துவிட்டார்கள். அது ஒரு மாட்டுக் கொட்டையாக இருந்தது. அவரது ஆடைகளைக் கழற்றி, கைகளையும் கால்களையும் ஒரு கம்பத்தில் கட்டி அவர்மீது அட்டைகளை விடடுவிட்டார்கள். அவை அவருடைய இரத்தத்தை உறிஞ்சியது. பலம் குன்றிப்போனார். என்றாலும் அந்த அதிகமாக வேதனையிலும் கடவுளிடம் ஜெபிக்கவும் அவரை  துதிக்கவும் ஆரம்பித்தார். இதைப் பார்த்த அதிகாரிகள் அவருக்குப் புத்தி சுயாதீனம் இல்லை என்று எண்ணி உடனடியாக விடுதலை செய்தார்கள். அட்டைகளினால் இரத்தம் உறிஞ்சப்பட்டுப் பலவீனமான நிலையில் இருந்தபோதிலும் மறுபடியுமாகப் பக்கத்திலிருந்த உருக்குச் சென்று தெருவில் நின்று நற்செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார். அவருக்கு நேரிட்ட எல்லா துன்பத்திலும் என்னுடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்காக நான் பாடு அனுபவிப்பது ஒரு மாபெரும் மகிழ்சியின் இரகசியம் என்று சுந்தர் கூறுவார்.

உலகத்திற்கு அவரது அறைகூவல்
அவர் பட்ட பாடுகளும் அவரது ஒப்பற்ற அனுபவங்களும் விரைவில் வெளி உலகின் கவனத்திற்கு வந்தது. உலகின் பல பாகங்களிலும் உள்ள கிறிஸ்தவ மக்களின் சிந்தனை இந்த இந்திய அப்போஸ்தலர் மீது பதிய ஆரம்பித்தது. கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரசங்கிக்கவேண்டும் என்ற அழைப்பு அவருக்கு இந்தியாவின் எல்லா பாகங்களிலுமிருந்து வந்தது. அவர் சென்ற இடங்களில் எல்லாம், தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு சிலுவை நாதரைப் பின்பற்றவேண்டும் என்பதையே அறைகூவலாகவும், மிசனறி அழைப்பாகவும் கூறினார். இவரது மிசனறி அறைகூவல்கள் அநேகரை ஜெபிப்பதற்கும், செயல்படுவதற்கும் தூண்டி விட்டது. சிலோன், பர்மா, மலேயா, சீனா, ஐப்பான் ஆகிய நாடகளுக்கச் சென்று பிரசங்கித்தார். மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா இன்னும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று நற்செய்தி வழக்கினார்.

பிரயாணத்தின் கடினத்தையும் அதிலே ஏற்படவிருக்கும் அபாயங்களையும் நான் முழுவதுமாக உணர்கிறபோதிலும், நான் இன்றைக்கு திபெத் நோக்கிப்பிரயாணம் செய்கிறேன். ஏனென்றால் நான் என்னுடைய கடமையை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்று 1929ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் திகதி தன்னுடைய நண்பர்களுக்கு எழுதிய குறிப்பிலே எழுதியிருந்தார். திபெத் சென்று விட்டுத் திரும்பி வருவதற்கான சமயம் கடந்துவிட்டது. ஆனால் அவரோ வரவில்லை. எந்தவிதமான செய்தியும் அவரிடத்தில் இருந்து கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் பிரயாணத்தில் மலைச் சிகரங்களைக் கடந்து செல்லும்போது இறந்திருக்கலாம். அல்லது ஓர் ஆழமான கிணற்றிலே தூக்கிப் போடப்பட்டிருக்கலாம். அல்லது யாக் என்னும் எருமையின் நனைந்த தோலுக்குள்ளாக வைத்துக் கட்டப்பட்டு சுருட்டப்பட்டு அவருடைய எலும்புகள் முறிக்கப்பட்ட நிலையில் அவர் ஓர் இரத்த சாட்சியாக மரித்திருக்கலாம். அவரது முடிவு எப்படியாக இருந்தாலும் இந்தியாவின் அப்போஸ்தலராகிய சாது சுந்தர் சிங் தனது ஜீவகிரிடத்தைப் பெற்றுக்கொண்டார் என்பது மட்டும் உறுதியானது.

 Note:- உண்மையான படைப்பாளிகளுக்கு எமது இதயங்கனிந்த நன்றிகள். 

1 கருத்து: