Translate

கசப்பை மதுரமாக்கும் இயேசு, உங்கள் அருகில் ..!!!

       இஸ்ரவேல் ஜனங்கள் கானானை நோக்கி பயணம் செய்தபோது ஒரு துரவைக் கண்டனர். யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை; கர்த்தரையும் நோக்கி பார்க்கவில்லை; குதுகலத்துடன் நீரை அருந்தத் துவங்கினர். ஆனால் அந்த தண்ணீர் மிகவும் கசப்பாக இருந்தது. நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது உண்டு. நாம் நல்லது என்று எண்ணித் துவங்கிய காரியங்கள் சிலநேரங்களில் தீயதாகவும் சமாதானத்தை தரும் என்று செய்தவை நம் அமைதியைக் குலைப்பதாகவும் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று நம்பி துவங்கியவை அதை அதலபாதாளத்துக்கு தள்ளிவிடுவதாகவும் காணப்படக்கூடும். நாம் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அது கர்த்தருக்கு பிரியமாக இருக்குமா? வேதத்தின் அடிப்படையில் அது சரிதானா!? என ஆராயவேண்டும். வேதம் சொல்லுகிறது. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். (சங் 37:5)

    அவர்கள் அறியாமையினால் அதை செய்தபோதிலும், அன்புமிக்க தேவன் அந்த துரவின் அருகிலேயே அதன் கசப்பை மதுரமாக்கும் மரத்தை வைத்திருந்தார். அவர்கள் கர்த்தரை நோக்கிப்பார்த்தபோது; அவரது ஆலோசனையின்படி அந்தமரத்தை தண்ணீரில் போட்டபோது; தண்ணீர் மதுரமாக மாறியது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எல்லா பிரச்சினைக்கும் காரணமாக இருப்பது நீங்கள் ஆலோசனையின்றியோ உணர்ச்சிவசப்பட்டோ செய்த செயல்களாக இருக்கலாம்.! அவற்றில் பலவற்றின் தீர்வுக்கு மாற்றுவழி என்ற ஒன்றே இல்லாமல் இருக்கலாம்.!   கலங்கவேண்டாம்..!!  உங்கள் வாழ்க்கையில் எத்தனை கசப்பு வந்தாலும் பாசத்தோடு அந்த கசப்பை மதுரமாக்கக்கூடிய ஒரு மரம் உங்கள் அருகில் உண்டு. உங்களை வேதனையில் ஆழ்த்தும் மாரா குடும்ப வாழ்க்கையா? தொழிலா? கடன் பிரச்சினையா? கல்வியா? எதுவாக இருப்பினும் கசப்பை மதுரமாக்கும் இயேசு உங்கள் அருகில் உண்டு. இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குகிறதும் இல்லை தூங்குகிறதும் இல்லை.

    கர்த்தரின் சமுகத்தில் உங்களை தாழ்த்துங்கள். அவரிடம் மன்றாடுங்கள். மாராவின் கசப்பை மாற்றிய தேவன் உங்கள் வாழ்கையில் நீங்கள் அனுபவிக்கும் கசப்பை நீங்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை மாற்றவல்லவர். நீங்கள் அவரை தேடிச்செல்ல தேவையில்லை. இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன் (வெளி 3:20) சகோதரனே.! சகோதரியே.! இன்றே உங்கள் இருதயத்தின் கதவுகள் திறக்கப்படட்டும். அவர் உங்கள் கசப்புகளை மதுரமாக மாற்றுவார். உங்களை வேதனைப்படுத்திய அதே சூழ்நிலையை உங்களை சந்தோஷப்படுத்தும் சூழ்நிலையாக மற்ற இயேசு கிறிஸ்துவால் கூடும். சர்வ வல்லமையுள்ளவரை உங்கள் வாழ்க்கையில் அனுமதியுங்கள்; உங்கள் தோல்விகள் வெற்றிகளாக மாறும்.

சிந்தனைக்கு:-
... இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும்  நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். (எபி 3:7-8)

குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள்.!

    குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள், உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.  அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார். என்று சங்கீதம் 45 : 10 சொல்லுகிறது. தேவனுக்கும் மனிதனுக்குமான உறவை வேதம் பலவிதமான உவமைகளின் மூலமாக விளக்குகிறது. உதாரணமாக தாய்க்கும் பிள்ளைக்குமான உறவாகவும்; மேய்ப்பனுக்கும் ஆட்டுக்குமான உறவாகவும்; கோழிக்கும் அதன் குஞ்சுக்கும் இடையேயான உறவாகவும் என இந்த பட்டியல் நீளுகிறது. இந்த வசனம் ராஜா மற்றும் ராஜாவுக்கு நியமிக்கப்பட்ட கன்னிகைக்கும் இடையான உறவாக நம்மை உவமித்து உயிருள்ள திருச்சபையும் தேவன் வசிக்கும் ஆலயமுமாகிய நமக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறது.

    மனிதன் பாவம் செய்வதினால் பாவியாவதில்லை அவன் பாவியாக பிறப்பதினால் பாவம் செய்கிறான். சங்கீதக்காரன் சொல்லுகிறான் இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.(சங் 51:5) ... நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். (எபே 2:3) பாவம் செய்வது மனித சுபாவம்.

    தேவன் நம்மை இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு (2பேது 1:4) அழைத்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு பரிசுத்தமாக்கப்படும்போது, தேவன் வெறுக்கிற நம்மில் புரையோடிப்போயிருக்கும் பாவ சுபவாவங்கள் நம்மைவிட்டு முற்றிலும் நீக்கப்படுகிறது. கர்த்தர் விரும்புகிற நற்குணங்கள் நம்மிலிருந்து புறப்படும்போது நாம் முற்றிலும்  கர்த்தருக்கு சொந்தமானவர்களாக மாறுகிறோம்.நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க  நியமித்தபடியால்... (2கொரி 11:2) என அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்.

    சகோதரனே.! சகோதரியே.! உறவினர்களையும் வீட்டையும் மறப்பது எவ்வளவு கடினமோ பாவ சுபாவத்தை நம்மைவிட்டு அகற்றுவதும் அவ்வளவு கடினமான காரியமாகும். ஆனால் அற்பணிப்பு உணர்வுடனும் தேவபலத்துடனும் அதை செய்யும்போது நாம் தேவனுக்குரியவர்களாக தேவனுடைய உடைமையாக மாறுகிறோம். திருமணமான பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எப்படி ஒரு கணவனுடைய பிரச்சினையோ அதுபோல நீங்களும் நானும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவனுடைய பிரச்சினைகளாகிறது. வேதம் சொல்லுகிறது. உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். (சக 2:8)

சிந்தனைக்கு:-
  • அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். (சங் 91:14)
  • இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் (மத் 21:4)