Translate

இந்தியாவின் அப்போஸ்தலர் 'தோமா'


இயேசு கிறிஸ்துவின் பிரதான சீடர்களான பன்னிருவரில் ஒருவர்தான் தோமா. திருச்சபை பாரம்பரிய செய்திகளின் அடிப்படையில் இவரது முழு பெயர் 'யூதா தோமா' என்பதாகும். இயேசு கிறிஸ்து பரமேறி சென்றபிறகு தேற்றரவாளனாம் தூய ஆவியால் நிரப்பபட்ட சீடர்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும்  சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். என்ற தம் தலைவராம் இறைமைந்தனின் கட்டளையை சிரமேற்று உலகமக்களை பாவ இருளிலிருந்து விடுவிக்க நற்செய்தி என்னும் ஒளியை பல்வேறு நாடுகளுக்கு கொண்டுசென்றனர். சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் அறிவொளியடைந்தனர். அந்தவகையில் பல்வேறு நாடுகளில் நற்செய்தியை அறிமுகப்படுத்திய தோமா AD 52-ல் கடல் மார்க்கமாக சேரநாட்டின் (தற்போதைய கேரளா) முசிறி பகுதிக்கு வந்தார். [பிற்காலத்தில் பல்வேறு நிலவியல் மாற்றங்களை சந்தித்த  சேரநாட்டின் புகழ்பெற்ற முசிறி துறைமுகம் தற்போது கொடுங்ஙல்லூர் என்று அழைக்கப்படுகிறது]     

மலபார் (கேரள) பகுதிக்குவந்த தோமா ஆயிரக்கணக்கான மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். தம் இனத்தவரான யூதர்கள் அங்குவசிப்பதை கண்டு அவர்களுக்கும் நற்செய்தியை அறிவித்தார். பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டனர். முசிறிக்கு அருகிலுள்ள பாலையூர் பகுதியில் தோமா போதிக்கும்போது சில பிராமணர்கள் தோமாவின் போதனையை ஏற்றுக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த வேறுசில பிராமணர்கள் அவ்வூரைவிட்டு வெளியேறியதுடன் அவ்வூருக்கு சாப்பாக்காடு (சாபமான இடம்) என்றும் பெயரிட்டனர். பின்பு இவர்கள் சற்று தொலைவிலுள்ள வெம்மனாடு என்ற பகுதியில் குடியேறினர்.

தமது போதனையை ஏற்றுக்கொண்டு மனம்திரும்பிய மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்து அவர்களுக்காக சபைகளையும் நிறுவினார் தோமா. மலபார் பகுதியில் அவர் ஏழு சபைகளை நிறுவியதாக குறிப்புகள் உள்ளன. அந்த ஏழு இடங்களாவன.

  • முசிறி (கொடுங்ஙல்லூர்)
  • பள்ளுர்
  • பரூர் (கோட்டக்காவு)
  • கோத்தமங்ஙலம்
  • காயல்
  • நிரணம்
  • கொல்லம்
மேற்கண்ட பகுதிகளில் மட்டுமல்லாது மலையாற்றூர்  போன்ற பல சிறிய ஊர்களிலும் அப்பேஸ்தலர்  தோமா பணியாற்றியதற்கு சான்றுகள் உள்ளன.  பின்பு திருவிதாங்கோடு பகுதிக்கு வந்த தோமா அங்கும் ஒரு ஆலயத்தை கட்டி பலருக்கு திருமுழுக்கு கொடுத்துவிட்டு AD 65-ல்  கொரமண்டல் பகுதிக்கு (தற்போதைய சென்னை) சென்றார். 

தோமா கட்டிய தேவாலயம், திருவிதாங்கோடு,
 
கன்னியாகுமரி மாவட்டம் 

சாந்தோம் பேராலயம், சென்னை
மயிலாப்பூரை அடைந்த தோமா சின்னமலை (இன்றைய சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ளது) மற்றும் சற்று தொலைவில் உள்ள பெரியமலை பகுதிகளில் மக்களுக்கு போதனை செய்தார். தோமா மற்றும் அவர்காட்டும் மர்க்கத்தின் செல்வாக்கு மயிலை மக்களிடம் பெருகுவதை கண்ட காளிகோயில் பூசாரிகள் எரிச்சலடைந்தனர். பொய் குற்றச்சாட்டுகள்மூலம் அரசரிடம் தண்டனை பெற்றுத்தர இயலாததால் நேரடியாக செயலில் இறங்கினர். இறுதியாக AD 72-ல் பெரியமலை பகுதில் வைத்தது களிகோயில் பூசாரிகளால் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்தசாட்சியாக மரணம் அடைந்தார்.

தோமாவின் சீடர்கள் அரசரின் அனுமதியுடன் அவரது உடலை மைலாப்பூரில் நல்லடக்கம் செய்தனர். தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மகாதேவன் என்ற மன்னரின் உத்தரவுப்படிஒரு பெரிய நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது. அங்கு தற்போது இருக்கும் சாந்தோம் பேராலயம் 1896-ல் கட்டப்பட்டது. தோமா ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தம் வாய்மொழியாக கூறிய வார்த்தைகள் இங்கு நினைவு கூறத்தக்கது. “அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்”. (யோவா 11:16) என்பதே அது. தம் உயிரினும்மேலாக சுவிசேஷத்தை எண்ணிய அவரது வாழ்வு நிச்சயமாக அகில உலக கிறிஸ்தவர்களுக்கும் ஒரு அழகிய முன்மாதிரியே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  


-Dr.ராஜேந்திரபிரசாத்


"ஜரேப்பாவின் பல நாடுகள் கிறிஸ்தவத்தை அறியும் முன்னரே புனித தோமா இந்தியாவுக்கு வருகை புரிந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல ஜரேப்பிய நாடுகளின் கிறிஸ்தவர்களுக்கும் முந்தைய வரலாறு புனித தோமா வழிவந்த இந்திய கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இது நாம் உண்மையில் பெருமை  கொள்ளத்தக்க செய்தியாகும்." 




-Dr.ராஜேந்திரபிரசாத் (இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்)




- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக