Translate

குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள்.!

    குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள், உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.  அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார். என்று சங்கீதம் 45 : 10 சொல்லுகிறது. தேவனுக்கும் மனிதனுக்குமான உறவை வேதம் பலவிதமான உவமைகளின் மூலமாக விளக்குகிறது. உதாரணமாக தாய்க்கும் பிள்ளைக்குமான உறவாகவும்; மேய்ப்பனுக்கும் ஆட்டுக்குமான உறவாகவும்; கோழிக்கும் அதன் குஞ்சுக்கும் இடையேயான உறவாகவும் என இந்த பட்டியல் நீளுகிறது. இந்த வசனம் ராஜா மற்றும் ராஜாவுக்கு நியமிக்கப்பட்ட கன்னிகைக்கும் இடையான உறவாக நம்மை உவமித்து உயிருள்ள திருச்சபையும் தேவன் வசிக்கும் ஆலயமுமாகிய நமக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறது.

    மனிதன் பாவம் செய்வதினால் பாவியாவதில்லை அவன் பாவியாக பிறப்பதினால் பாவம் செய்கிறான். சங்கீதக்காரன் சொல்லுகிறான் இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.(சங் 51:5) ... நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். (எபே 2:3) பாவம் செய்வது மனித சுபாவம்.

    தேவன் நம்மை இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு (2பேது 1:4) அழைத்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு பரிசுத்தமாக்கப்படும்போது, தேவன் வெறுக்கிற நம்மில் புரையோடிப்போயிருக்கும் பாவ சுபவாவங்கள் நம்மைவிட்டு முற்றிலும் நீக்கப்படுகிறது. கர்த்தர் விரும்புகிற நற்குணங்கள் நம்மிலிருந்து புறப்படும்போது நாம் முற்றிலும்  கர்த்தருக்கு சொந்தமானவர்களாக மாறுகிறோம்.நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க  நியமித்தபடியால்... (2கொரி 11:2) என அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்.

    சகோதரனே.! சகோதரியே.! உறவினர்களையும் வீட்டையும் மறப்பது எவ்வளவு கடினமோ பாவ சுபாவத்தை நம்மைவிட்டு அகற்றுவதும் அவ்வளவு கடினமான காரியமாகும். ஆனால் அற்பணிப்பு உணர்வுடனும் தேவபலத்துடனும் அதை செய்யும்போது நாம் தேவனுக்குரியவர்களாக தேவனுடைய உடைமையாக மாறுகிறோம். திருமணமான பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எப்படி ஒரு கணவனுடைய பிரச்சினையோ அதுபோல நீங்களும் நானும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவனுடைய பிரச்சினைகளாகிறது. வேதம் சொல்லுகிறது. உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். (சக 2:8)

சிந்தனைக்கு:-
  • அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். (சங் 91:14)
  • இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் (மத் 21:4)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக