Translate

ஏன் வேண்டும் விசுவாசம்...!?

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். (எபி 11:6)

ஆசாரியனாகிய சகரியா
ஆசாரியனாகிய சகரியா தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவராக காணப்பட்டார். வயது முதிர்ந்தவரான அவர் தனக்கு ஒரு குழந்தை பிறக்காதா..? என்ற ஏக்கத்துடன் தேவசமூகத்தில் விண்ணப்பமும் செய்தார். ஆனால் விசுவாசம் மட்டும் இல்லை. வயது முதிர்ந்தவரான அவருக்கு ஒரு குமாரனைக் கொடுப்பேன் என்று தேவதூதன் மூலமாக தேவன் அறிவித்தபோது அதை விசுவாசியாமல் இதை எதனால் அறிவேன் என்று கேட்டார். அதினால் சிலகாலம் பேசக்கூடாமல் ஊமையானார்.

படகிலே செல்கையில் கடலின் சீற்றத்தைக் கண்டு பயந்த சீடர்களிடம் ஏன் உங்களுக்கு விசுவாசமில்லாமல் போயிற்று என்று இயேசு கேட்டார். ஒரு வார்த்தை சொல்லும், என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்று கூறிய நூற்றுக்கு அதிபதியின் விசுவாசத்தைக்  கண்டு ஆச்சரியப்பட்டார் இயேசு. மரண அவஸ்தையிலிருந்து, தன் மகளை விடுவிக்க இயேசுவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றான் யவீரு. வழியிலே செல்கையில் அவள் மரித்துவிட்ட செய்தி அவனுக்கு அறிவிக்கப்பட்டது. வேதனையான சூழ்நிலையிலிருந்த அவனை இயேசு கிறிஸ்து திடப்படுத்தினார்.

பாதகமான சூழ்நிலையில் தேவ வல்லமையை விட பிரச்சினை பெரியது என்பது போன்ற தவறான தோற்றத்தை ஏற்படுத்தி பிசாசு நம்மை சோர்வுறச் செய்வான். நாம் நம்முடைய விசுவாசத்தை ஒரு போதும்  இழந்துவிடக்கூடாது. விசுவாசத்தில் தடுமாற்றம் வரும்போது  என் அவிசுவாசம் நீங்க உதவிசெய்யும் ஆண்டவரே என்று தேவனின் உதவியை நாட வேண்டும். எங்கள் விசுவாசத்தை விசுவாசத்தை வர்த்திக்கச்செய்யும்  என்று சீஷர்கள் கேட்டது போல இயேசுவிடம் கேட்போம். பேதுருவின் விசுவாசம் ஒழிந்துபோகாதபடி காத்த இயேசு இன்று நம் விசுவாசத்தையும் காக்க வல்லவராயிருக்கிறார்.

தேவனுக்குப் பிரியமானது நம்மிடமிருக்கும் விசுவாசமே…! நாம் ஜெபத்தில் எவைகளை கேட்கிறோமோ அவைகளை பெற்றுக்கொள்வோம் என்ற விசுவாசம் நமக்கு வேண்டும். ஆபிரகாமைப்போல விசுவாசமுள்ளவர்களாக காணப்பட தேவன்தாமே நமக்கு உதவிசெய்வாராக.

சிந்தனைக்கு:-  
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. (எபி 11:1)
  • ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும்செத்ததாயிருக்கிறது. (யாக் 2:26)
  • நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம். (எபி-10:39)

இயேசு சொன்னார்:-
  • நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் …..(மத் 21:22)
  • ...என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். (யோவா 14:12)
  • குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது…. (யோவா 6:40)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக