Translate

பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்...!



" பேராசை கொண்ட எறும்பு ஒன்று தன்னை விட பெரிதான இலையை இழுத்துக் கொண்டு தனது வசிப்பிடமாகிய எறும்பு புற்றுக்கு சென்று கொண்டிருந்தது. பல மணி நேர கடின உழைப்பிற்கு பின்னர், ஒரு வழியாக புற்றுக்கு அருகில் வந்து விட்டது. சுவருக்கும் தரைக்கும் இடையேயான சிறிய துவாரத்தின் வழியாக சென்றால் தான் எறும்பு புற்றை அடைய முடியும். பேராசை கொண்ட எறும்பிற்கு புத்தி தெளிய ஆரம்பித்தது. பல மணி நேர கடினமாக பிரயாசப்பட்டு இலையை இழுத்து வந்தாலும், அதனை உள்ளே கொண்டு முடியாது என்பதை உணர்ந்து கொண்டது. பின்னர் அந்த இலையை அங்கேயே விட்டு விட்டு, துவாரத்தின் வழியாக சென்று தனது புற்றை அடைந்தது அந்த பேராசை கொண்ட எறும்பு. "இதை வாசிக்கும் பொழுது அந்த எறும்பைக் குறித்து நமக்கு சிரிப்பு வரலாம். ஐயோ பாவம்! என்ற உணர்வு, ஏற்ப்படலாம்.

 பிரியமானவர்களே, இதிலே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உள்ளது. நம்மில் அநேகர் இப்படித்தான் வாழ்கின்றோம்.
  எதற்கு?
  ஏன்?
  யாருக்காக? என்று யோசிக்காமல், அழிந்து போகின்ற பணத்துக்காக, புகழுக்காக, பெயருக்காக.. நம்முடைய தாலந்துகளையும், வாய்ப்புகளையும், நேரங்களையும் செலவழித்துக் கொண்டிருகின்றோம். எப்படியாது நாம் விரும்பியதை அடைய வேண்டுமென்று ஜீவனையே பணயம் வைக்கின்றோம். என்றைக்காவது நாம் பிரயாசப்படுவது என்றென்றும் நம்மோடு இருக்குமா, என்று தேவ சமூகத்தில் அமர்ந்து யோசித்தது உண்டா?உலக வரலாற்றில் மிகப்பெரிய ஞானியாக போற்றப்படுகின்ற சாலமோன் சொல்கின்றார், "சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது" (பிரசங்கி 1:14).

ஆம், பிரியமானவர்களே! நாம் நமது கண்களை சூரியனுக்கு கீழேயே வைத்திருந்தால் சஞ்சலமும் போராட்டமும் தான் மிஞ்சும். தேவன் நம்மிடம் கூறுவது "உன் கண்களை ஏறெடுத்துப்பார்" என்பதாகும். அன்றைக்கு தேவன் ஆபிரகாமை அழைத்து, "நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்"(ஆதி 15:5) என்று ஆசிர்வதித்தார்.நாமும் நமது கண்களை ஏறெடுத்து பரலோகத்தை பார்க்கும் படியாகவும், அதற்காக காத்திருக்கும் படியாகவும் அழைக்கப்பட்டிருகின்றோம்.

இயேசு கிறிஸ்து மலைப்பிரசங்கத்தில், "பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்" (மத் 6:20) என்று கூறினார். மேலும் "பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள்" (லூக்கா 12:33) என்றும் அறிவுறுத்தினார். நாம் என்ன செய்யப்போகின்றோம். செல்வங்களை இந்த உலகத்தில் சேர்த்து வைக்கப்போகின்றோமா? அல்லது நித்திய ராஜ்யமாம் பரலோகத்தில் சேர்த்து வைக்கப்போகின்றோமா? பிரியமானவர்களே! இங்கே சேர்த்து வைத்தால் எறும்பின் கதிதான் நமக்கும். எனவே பரலோகத்தில் எப்படி பொக்கிஷங்களை சேர்த்து வைப்பது என்று வேதாகமத்தில் கற்றுக்கொண்டு, அங்கே ஒரு அக்கவுண்ட் திறந்து அதிலே சேர்த்து வைக்க ஆரம்பியுங்கள். தேவன் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.

    ---               ---              ---              ---            ---            ---            ---
  • நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். எபேசியர் 6 :11
  • ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். யோவான் 17:3
  • நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். 1 யோவான் 2 :25


Originally Posted by

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக