Translate

சகேயுவின் வாழ்க்கையும் இன்றைய சமுதாயமும் ஓர் அலசல்


உலகமக்கள் அனைவருமே கர்த்தருடைய படைப்புகளே. அதனால் தான்  இயேசு கிறிஸ்து தனது  சிலுவை  மரணத்தின் மூலம்  முழு மனுக்குலத்துக்கும்  மீட்பை  உறுதிசெய்தார்.  பல மனிதர்கள்  ஒருவேளை மீட்பை குறித்ததான விழிப்புணர்வற்று அல்லது  அதைக் குறித்து  அறியாமல் இருக்கலாம். முழு உலகத்திற்கும் மீட்பைக் குறித்த நற்செய்தியை  அறிவிக்கும்   பொறுப்பை   சீடர்களாகிய   அனைவருக்கும்  கொடுத்துள்ளார். (கிறிஸ்துவின் அன்பை  அறிந்து திரு முழுக்கின் மூலம் அவருடன் ஐக்கியமான அனைவரும் அவருடைய சீடர்களே)…!

நமது சமுதாயம் செய்துவரும் பல்வேறு தவறுகளை சகேயுவின்  வாழ்க்கையை ஆராய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1. பாவியான மனிதர் மனந்திரும்பியதைக் குறித்த முறுமுறுப்பு:-

புதிதாக ஒரு மனிதர் தனது பாவங்களை விட்டு கர்த்தரிடமாக  சேர்ந்தால்  அல்லது  விழுந்துபோன  மனிதர்  தனது  பாவங்களைவிட்டு / தவறான  நடக்கையை விட்டு  கர்த்தரிடமாக  சேர்ந்தால் அதுவரை  அவரைப் பற்றி  கவலையேபடாத  சமுதாயம்  அது முதல்  அவரைக் குறித்து  குறை கூறத் துவங்குகிறது. சகேயுவின்  வாழ்வில்  நடந்த  சம்பவமே இதற்கு   சான்று. (லூக் 19:5-6)    இயேசு அந்த   இடத்தில் வந்தபோது,  அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ  சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே  தங்க வேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய்   இறங்கி,   சந்தோஷத்தோடே அவரை   அழைத்துக் கொண்டு போனான். அதைக் கண்ட  யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று  முறுமுறுத்தார்கள்.

2. தவறுகளை திருத்திக்கொள்ளுதல்:-
இன்று பலரும் இயேசுவை அறிந்திருந்தாலும் இரட்சிப்பின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாதபடி  பல்வேறு  காரியங்கள் அவர்களை தடைசெய்கிறது. அவைகளில் ஒன்று தனது தவறுகளை உணராமலிருப்பதே..! வேதம்  சொல்லுகிறது:  தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதி 28:13) இயேசுவைப் பார்த்தமாத்திரத்திலேயே சகேயு சொன்னார்: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்.  (லூக் 19:8) இங்கு  இயேசு  கிறிஸ்து  சகேயுவுக்கு  போதனை  எதுவும்  செய்ததாகக்  கூறப்படவில்லை  ஆனால்  இயேசுவை  கண்டவுடனே  தனது  தவறுகளை  விட்டுவிடுவது மட்டுமல்லாது  தான தருமங்கள்  செய்யவும்  ஆரம்பிக்கின்றார் சகேயு.  இன்று பிரச்சினைகளை முடித்துவைக்கும்போது கேட்க நேரும் பிரபலமான வார்த்தை ஒன்று உண்டு நான் செய்தது தவறாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்என்பதே அது. இந்த வர்த்தையே மேற்படி நபர் தனது தவறை உணரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தனது குற்றங்களை அறியாதவன் எப்படி அவற்றை கர்த்தரிடம் அறிக்கை செய்யமுடியும்.?

3. ஒருமனம் / குடும்ப ஒற்றுமை:-
இயேசு சகேயுவின் வீட்டுக்கு வந்தபோது முழு குடும்பமும் அவரை ஏற்றுக்கொண்டது. அங்கே ஒருமனமும் ஒற்றுமையும் காணப்பட்டது (சச்சரவுகள் ஏதும் ஏற்பட்டதாக குறிப்புகள் இல்லை.) இயேசு கிறிஸ்து தமது சீடர்களுக்கு சொல்லிய விஷயம் இங்கு  நினைவுகூறத்தக்கது. (மத் 18:19-20) . . . உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக் கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒருமனமும் ஒற்றுமையும் மிகவும் அவசியம்.  



ஒருமனதை அடைவது எப்படி.?

குறைகளை மன்னியுங்கள், தவறுகளை பொறுத்துக் கொள்ளுங்கள், ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள், ஜெபத்திலே தரித்திருங்கள். இயேசு உங்கள் உள்ளக்கவை தட்டுவது உங்கள் காதுகளில் கேட்கட்டும். உங்கள் உள்ளம் மட்டுமல்ல இல்லமும் தேவன் தங்கும் வீடாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சிந்தனைக்கு:-

 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.(யோவா 14:23)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக